மகளிர் ஐபிஎல் காட்சிக் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் நோவாஸ் அணி, டிரையல் பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவில், பெண்கள் தொடர்பான பல விளையாட்டுத் துறைகள் கண்டும் காணாதது போலவே செயல்பட்டு வந்தது; குறிப்பாக கிரிக்கெட். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பெண்கள் கிரிக்கெட் அணியும் இருந்து வந்தாலும், ஆண்கள் அணிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண்கள் அணிக்குக் கொடுக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்தது.
இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கிரிக்கெட்டையே நிர்வகிக்கிறபோதும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அதன் சமீபத்திய தொடர் வெற்றிகள் வழியாகத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை சென்று தோற்றதால், இந்திய மகளிர் அணி அதிகக் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து பெண்களுக்கும் ஐபிஎல் போன்ற போட்டிகள் நடத்தப்படவேண்டும் என்ற குரல் எழுந்தது.
இந்நிலையில், பெண்கள் ஐபிஎல் போட்டிகளும் நடத்தலாம் எனத் திட்டமிட்டு அதற்கு முன் ஒரு காட்சி போட்டி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 போட்டியாளர்கள் உட்பட 26 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, மகளிர் ஐபிஎல் காட்சி கிரிக்கெட் போட்டி இன்று நடந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல் பிளேசர்ஸ் அணி மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டிரையல் பிளேசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களைக் குவித்தது. அதன்பின் ஆடிய சூப்பர் நோவாஸ் அணியில் கணிசமான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, இறுதிக்கட்டத்தில் போட்டி பரபரப்பாக மாறியது.
கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்த சூழலில் கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. பூஜா வஸ்ட்ராகர் வெற்றிக்கான ரன்னை அடிக்க, சூப்பர் நோவாஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.�,