ப்ளஸ் 2: வேலைவாய்ப்புக்குப் புதிய பாடப் பிரிவுகள்!

Published On:

| By Balaji

புதுக்கோட்டை மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 16) தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ப்ளஸ் 2 மாணவர்களது வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், இந்த ஆண்டும் லேப்டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதே போன்று, அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளும் விரைவில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். ப்ளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பட்டயப் படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக 25 ஆயிரம் மாணவர்களை அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பட்டயப் படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 10 சதவிகிதம் பேருக்குக் கண் பார்வைக் குறைபாடு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்குப் பரிசோதனை செய்து கண் குறைபாட்டுக்கான சிகிச்சையை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆகஸ்ட்15ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாநில சமூகநலத் துறையால் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். “இது அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், மாணவர்களுக்குப் பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்துவரும் வேளையில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்தப் பயிற்சியால், அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share