சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-ஆக இருந்த பொன் மாணிக்கவேல் மீது டி.எஸ்.பி காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆலடிப்பட்டி கிராமத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் விவசாய நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலைகளை கடத்தியது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், டி.எஸ்.பி காதர் பாஷா மற்றும் காவலர் சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்த விவகாரத்தில் டி.எஸ்.பி காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காதர் பாஷா கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-ஆக இருந்த பொன்.மாணிக்கவேல் தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற வழக்கை தொடுத்திருப்பதாகவும், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்ப வைக்க தன்னை சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டி.எஸ்.பி காதர் பாஷா மற்றும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இருவரும் ஒருவருக்கொருவரை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள சிபிஐ குற்றப் பிரிவு இந்த வழக்கை தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளது.
சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தீனதயாளனுக்கு உதவியாக பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளது.
செல்வம்
அட்லீயால் ஷாருக்கான் படத்துக்கு சிக்கல் : அதிர்ந்துபோன இந்தி சினிமா!
பாலியல் குற்றச்சாட்டு : நள்ளிரவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!