புகழேந்தி எனும் நான்: அரசியல் பேசும் கரு.பழனியப்பன்!

Published On:

| By Balaji

இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியிருக்கிறது.

ஆக்சிஸ் பிலிம் பாக்டரி ஜி.டில்லிபாபு தயாரிப்பில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘புகழேந்தி எனும் நான்’. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்குகிறார். டி.இமான் இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

ADVERTISEMENT

இயக்குநர் கரு.பழனியப்பன் தொடர்ந்து பலதரப்பட்ட சமூக பிரச்னைகளில் பங்குபெற்று தமிழகத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இப்போதும்கூட நீட் விவகாரத்தில் ஏதாவது ஓர் இடத்தில், அராஜக அரசின் முகமூடியைக் கிழித்துக்கொண்டுதான் இருப்பார்.

இவர் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு பார்த்திபன், விமல், விதார்த் போன்ற நடிகர்கள் நடித்து வெளிவந்த ‘ஜன்னல் ஓரம்’திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படம் சுமார் என்றாலும் ரசிகர்கள் மனதிலிருந்து இயக்குநர் கரு.பழனியப்பன் மறந்து போகவில்லை.

ADVERTISEMENT

தற்போது இவர் இயக்கிவரும் ‘புகழேந்தி எனும் நான்’ திரைப்படமும் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்பது படத்தின் தலைப்பைப் பார்க்கும்போதே தெரிகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘முதல்வன்’படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தின் பெயர் ‘புகழேந்தி’. இந்தப் படத்தில் இவர் முதலமைச்சராகப் பதவியேற்று ‘புகழேந்தி எனும் நான்’ என்று வசனம் பேசி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார். அந்த வசனத்தை இந்தத் திரைப்படத்துக்கு கரு.பழனியப்பன் தலைப்பாக சூட்டியது ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் எந்த மாதிரி அரசியலைப் பற்றி பேசப் போகிறது என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மாற்றுப்பட்ட கதைகளைத் தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் அருள்நிதி தற்போது முதன்முறையாக அரசியல் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கப் போகிறார் என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழேந்தி என்ன பேசப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share