பாமக எம்.எல்.ஏ. பதவியை தாம் ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல்களை சேலம் அருள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். PMK’s Salem Arul MLA Responds
பாமகவில் உட்கட்சி குழப்பம் தீவிரமடைந்த நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை (சேலம் மேற்கு தொகுதி) அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சேலம் அருள் எம்.எல்.ஏ. கூறியதாவது: அரசியலே வேண்டாம் என மன உளைச்சலில் இருக்கிறோம். வெளியில் சொல்ல முடியவில்லை. மிகப் பெரிய நெருக்கடியான காலம் எங்களுக்கு.
தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி பாமக. அப்படியான நிலையில் இந்த மாதிரி பிரச்சனைகள் எழுந்திருப்பதை என்னவென்று சொல்வது? இது நெருக்கடியான காலகட்டம். இதை நாங்கள் கடந்து வருவோம்.
பாமக எத்தனையோ நெருக்கடிகளைக் கடந்த இயக்கம். அதனால் இந்த நெருக்கடியையும் கடந்து வருவோம். பாமகவில் டாக்டர் ராமதாஸ்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர். நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லவே இல்லையே. டாக்டர் ராமதாஸை சந்திக்கத்தான் இன்று வந்தோம். டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு கடவுள். இவ்வாறு சேலம் அருள் எம்.எல்.ஏ. கூறினார்.