~பயிர் காப்பீட்டுத் தொகை: விவசாயிகள் போராட்டம்!

Published On:

| By Balaji

பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று (மே 24) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினய் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு வந்த தொப்பம்பட்டி விவசாயிகள் 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்பீடுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறி கூட்ட அரங்கில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமது, “திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இந்த இழப்பீடு தொகையை எதிர்பார்த்து 37,000க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர். மழையின்மை மற்றும் வறட்சியால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share