நாடக முன்னோட்டம்: கலைக் குடும்பத்தின் அடுத்த வாரிசு!

Published On:

| By Balaji

மதரா

**ஒரு சில பல நிமிடமும் பேச்சும்**

மனதில் தோன்றும் பயம், பரிதாபம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகளை எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் நினைத்த மாத்திரத்தில் பகிர்ந்துகொள்ள முடியுமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். எதிர்பாராதவிதமாக அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் எத்துணை மகிழ்ச்சி இருக்கும்!

லதா என்ற கதாபாத்திரத்துக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அது என்ன மாதிரியான சுவாரஸ்யங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஒன்றரை மணி நேரத்தில் மேடை நாடகமாகப் படைத்துக் காட்டவுள்ளார் கீதா கைலாசம்.

நாடகம், சினிமா, சின்னத்திரை எனக் கலைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ள இயக்குநர் கே.பாலசந்தர் குடும்பத்திலிருந்து அவரது மகன் பால கைலாசம் மறைவுக்குப் பின் எந்தப் படைப்பும் வெளியாகாமல் இருந்தது. அந்தக் கலைக் குடும்பத்தின் கலைப் பயணத்தை கே.பாலசந்தரின் மருமகளும், பால கைலாசம் அவர்களின் துணைவியாருமான கீதா கைலாசம் இப்போது முன்னெடுத்துச்செல்கிறார்.

நாளை (ஏப்ரல் 20) சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் மாலை 6.45 மணிக்கு ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ என்ற தலைப்பில் நாடகம் நடைபெறவுள்ளது. இந்த நாடகம் குறித்தும் அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் பயணம் குறித்தும் அதற்கான முன் தயாரிப்புகள் பற்றியும் அவரிடம் உரையாடினோம்.

“சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்து, நாடகம் போன்ற படைப்புச் செயல்பாடுகளில் ஆர்வம் உண்டு. என் அப்பாவுக்கு இப்போது 87 வயதாகிறது. இன்றும் அவர் கதைகள், நகைச்சுவை துணுக்குகள் எனத் தனக்குத் தோன்றும் விஷயங்களை எழுதிக்கொண்டே வருகிறார். வீட்டில் நானும் அப்பாவும் மட்டும் கதைகள் குறித்து விவாதிப்போம். நாடகம், சினிமாவுக்குச் செல்வோம். அப்போதே இதற்கான விதை விழுந்திருக்கலாம். கே.பி சாருக்கு மருமகள் ஆவதற்கு முன்னரே அவருக்கு நான் தீவிர ரசிகை. அவர் படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தேன். அதன் பாதிப்பில்தான் நான் இங்கே நாடக இயக்குநராக இருக்கிறேன்” என்று தனது பயணத்தின் தொடக்கம் குறித்துக் கூறினார்.

தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த பால கைலாசத்துக்குப் பணிநிமித்தமாக என்ன தேவை, எப்போது தேவை என்பதை அறிந்து அதைச் சரியாகப் படப்பிடிப்புத் தளத்தில் செய்துவந்தவர் கீதா. “நான் ஒரு சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட். திருமணத்துக்குப் பின் என் கணவரின் மின் பிம்பங்கள் புரொடக்ஷனில் தயாரிப்பு மேற்பார்வையில் பணியாற்றினேன். எனது படிப்பு இயல்பாகவே என்னை அந்தத் துறையின் பக்கம் தள்ளியது. நடிகர்கள் தேர்வு உட்பட அனைத்திலும் அப்போதே இயக்குநர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து விரைவாகச் செயலாற்றுவேன்” என்று தனது கடந்த காலத்தை நினைவுகூர்கிறார் கீதா கைலாசம்.

**அணையாத நெருப்பு**

“ஏன் இப்போது நாடக இயக்கத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு, “எனக்குப் படைப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதற்கான சூழல் அமையவில்லை. தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தேன். 2010ஆம் ஆண்டு எனது சிறுகதை முதன்முறையாகப் பிரசுரமானது. ஆனால் அதில் நான் தொடர்ச்சியாக கவனம் செலுத்தவில்லை. அவ்வப்போது நாடகம் இயக்கும் எண்ணம் வந்து செல்லும். இருபது வயதில் நமது கனவை நனவாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் வேறு; வயதான பின் அதைச் செய்வது வேறு. ஆனால், அந்த நெருப்பு எனக்குள் அணையாமல் இருந்தது. இப்போது மகன் ப்ளஸ் டூ முடித்துவிட்டார். மகளும் ஐ.ஐ.டியில் முதுகலை படிப்பு முடித்துள்ளார். இது சரியான தருணமாக இருக்கும் என்பதால் இப்போது இந்தப் பணியில் இறங்கியுள்ளேன்.”

**நாடகம் உருவான கதை**

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் முப்பது நிமிடங்கள் வரும்படியாக ஒரு நாடகம் ஒன்றை இயக்கும்படி கீதாவிடம் ஒரு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. மூன்று நாள்களில் அவசர கதியில் அதை அரங்கேற்றியிருக்கிறார். மனநல ஆலோசகர்கள் பங்கேற்ற அந்த விழாவில் அதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது என்று சொல்லும் கீதா, அதில் நடித்தவர்களுக்கும் தனக்கும் அது பெரிய ஊக்கமளித்தது என்கிறார். “அதை விரித்து 90 நிமிடங்களில் பெரிய அளவில் அரங்கேற்ற ஆவல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடும் உழைப்பின் பயனாக இந்த நாடகம் உருவாகியுள்ளது” என்று இந்த நாடகம் உருவான விதத்தை விவரிக்கிறார்.

இந்தியத் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்ட பாலசந்தரின் பெயரை அவரது மகன் பால கைலாசம் தனது பணிக்கு ஒருநாளும் பயன்படுத்திக் கொண்டதில்லை. அவரின் புகழின் நிழல் தன் மேல் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். “கே.பி.சாரின் படைப்புகள் பத்தாண்டுகள் அட்வான்ஸாக இருந்தன என்றால் பால கைலாசத்தின் படைப்புகள் இருபது ஆண்டுகள் அட்வான்ஸாக இருக்கும் என்பார்கள். அவர் இயக்கிய சில ஆவணப்படங்கள் இன்றும் முக்கியமானதாகப் பேசப்படுகிறது. மர்மதேசம், ரமணி Vs ரமணி போன்ற தொடர்களின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் இப்போதும் பகிரப்படுகின்றன” என்று கீதா பால கைலாசத்தை அவரது படைப்புகள் மூலம் நினைவுகூர்கிறார்.

தனது கணவர், மாமனார் என இருவரும் கலைத் துறையில் ஜாம்பவான்களாக இருந்தபோதும் கீதா அதை தனக்கான பின்புலமாகக் கொள்ளாமல் கடின உழைப்பையும் கற்பனைத் திறனையும் முன்னிறுத்திச் செயலாற்றி வருகிறார். இந்த விஷயத்தில் அவர் தனது கணவரை அப்படியே பின்தொடர்கிறார்.

**வியக்கவைக்கும் முன்னேற்பாடுகள்**

சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அவர் காட்டும் கவனமும் முன் தயாரிப்புகளுக்கு தரும் அதிக முக்கியத்துவமும் வியப்பளிக்கிறது. “எனக்கு முதல் நாடகம் என்றாலும் நாடகத்தை எங்கு அரங்கேற்றுவது, யாரைத் தொடர்புகொள்வது போன்ற விஷயங்களுக்காக நண்பர்களின் உதவியை நாடியுள்ளேன். ஆனால், நாடக உருவாக்கத்தில் எனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நானே அதற்குச் செயல்வடிவம் கொடுத்தேன். தேசிய நாடகப் பள்ளியில் படித்த நாடக ஆசிரியர் திரு.ரெஜின் நவீன நாடகங்களில் இயங்கிவருகிறார். அவர் எனது இந்த முன்னேற்பாடுகளைப் பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டார். இந்தச் செயல்முறைகளை எல்லாம் நாங்கள் எங்கள் நாடகங்களில் செய்வதில்லையே என்று கூறினார். அவர்களது நாடகங்களில் ஒத்திகையே ஆறு மாத காலம் செய்வார்கள்.”

“திரைக்கதை எழுதும்போதே அதிக இடமாற்றம் இல்லாமல் வழக்கமான ஒரு சோஷியல் டிராமாவுக்குத் தேவையான அளவு கதாபாத்திரங்களுடன் அமைத்தேன். திரைக்கதையை எழுதிய பின் தயாரிப்புக் காரணங்களுக்காக நிறைய மாற்றங்கள் செய்யவில்லை. தொடர்ந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அது இயல்பாக அமைந்துவிட்டது. கொஞ்சம் வயதான பின் படைப்பை உருவாக்க முயன்றால் எளிதாகச் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நம்மை அறியாமல் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அதற்கு உதவி செய்யும்” என்று தனது தயாரிப்பு அனுபவம் எப்படி நாடக இயக்கத்துக்கு உதவுகிறது என்பதை விளக்குகிறார்.

தயாரிப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டவருக்கு நடிகர்களிடம் வேலை வாங்குவது சவாலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், கீதாவின் அனுபவம் வேறு. “நடிகர்களுக்கு நான் நடித்துக் காண்பிப்பதுண்டு. அது எனக்கு மிகவும் எளிதாகவும் விருப்பமானதாகவும் இருந்தது. செய்து காட்டும்போதுதான் எனக்கு இயல்பாக அது வாய்த்திருந்தது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது” என்று நடிப்பு குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். மாடலும் நடிகையுமான மேகாராஜன் பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார். கணேஷ் வைத்யநாதன், ஹரினா, அனிதா, வெற்றி, நாகராஜன், பத்மா கணபதி, என் மகன் விஷ்ணு பாலா இவர்களுடன் கீதாவும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

“நாடகத்தில் கே.பாலசந்தரின் பாணியைப் பின்பற்றுவீர்களா?” என்று கேட்டோம். “கே.பி சார் பாணி என்று சொல்வது பெரிய வார்த்தை. அவரது பாதிப்பில் இருக்க வாய்ப்புகள் உண்டு. அன்றாடம் நமது வீட்டில் நடைபெறும் சம்பவங்களை யதார்த்தத்துடன் நகைச்சுவையாக உருவாக்கியுள்ளேன். வசனங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனமாக யோசித்து வைத்துள்ளேன். முதல் நாடகம் அரங்கேற்றம் செய்பவர்களுக்கு கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்பான்சர் செய்வது சபா நாடகங்களில் தொடர்ந்து வரும் நடைமுறையாக இருக்கிறது. அவர்களோடு பிரம்ம கான சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா இணைந்து இந்த நாடகத்தை ஸ்பான்சர் செய்கின்றனர்” என்று சொல்லும் கீதா, குடும்பத்தினர் தனக்கு அளிக்கும் ஆதரவும் நம்பிக்கையுமே தன்னை துடிப்புடன் இயங்கவைப்பதாகவும் கூறுகிறார்.

“குடும்ப உறுப்பினர்கள் எனக்குப் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்தனர். வீட்டில் ஒத்திகை பார்க்கும்போது என் மாமியார் கே.பி சாரும் இந்த மாதிரிதான் மெனக்கெடுவார் என்று நினைவுகூர்ந்தார். இவ்வளவு கஷ்டப்படுகிறாயே என்று வருத்தப்பட்டார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

திரையுலகில் நடிப்பு, இயக்கம், இசை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் முன்னணியில் இருப்பவர்களில் பலர் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். இப்போது அவரது குடும்பத்திலிருந்தே மற்றோர் இயக்குநரும் தயாராகிவிட்டார். நாடகம், திரைப்படம் என அவர் பெயருக்குப் பெருமை சேர்ப்பவராக கீதா கைலாசம் இருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

[ஒரு சில பல நிமிடமும் பேச்சும்](https://www.facebook.com/orusilapalanimidamumpechum/)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share