இரண்டு ஆண்டு தடைக்கு பின் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டு வந்த போது எம்.எஸ்.தோனி உணர்ச்சி வசப்பட்டு அழுதார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
கேப்டன் கூல் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி பொதுவாக வெற்றியோ,தோல்வியோ எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாதவராகவே ரசிகர்களால் கருதப்படுகிறார்.
அதே போல் ஆடுகளத்திலும் எவ்வளவு கடினமான நேரமாக இருந்தாலும் பொறுமை இழக்காமல் நிதானத்துடன் ஆட்டத்தை கையாள்பவர்.
எனினும் தோனி கண்ணீர் விட்டு கலங்கிய தருணம் குறித்து அவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.
சூதாட்ட புகாரில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட வந்த போது இச்சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், “ இரவு நேர உணவுக்காக நாங்கள் அனைவரும் குழுமியிருந்தோம். பொதுவாக ஆண்கள் அழுவதில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்று இரவு தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். யாருக்கும் அது தெரியாது” என்று சொன்ன ஹர்பஜன் சிங் மற்றொரு வீரரான இம்ரான் தாஹிரிடம் நான் சொல்வது சரிதானே தாஹிர் என்று கேள்வி எழுப்ப…ஆம் என தெரிவித்த தாஹிர்நானும் அங்கு இருந்தேன். அவரைப்பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தோனியை அப்படி பார்த்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் உணர்ந்தேன்.
அவர் அந்த அணியை தன்னுடைய குடும்பத்தை போல் கருதுகிறார். அந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமான தருணமாக காணப்பட்டது” என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
