2019 மக்களவைத் தேர்தலின் அழுமூஞ்சிக் குழந்தை என காங்கிரஸ் கட்சியை வர்ணித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அருண் ஜேட்லி.
இதுபற்றி தனது பிளாக்கில் எழுதியிருக்கும் அவர், தேர்தல் நன்னடத்தை விதிகளும் அரசியல் சட்டம் அளித்திருக்கும் பேச்சுரிமையும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறார்.
அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 324 இன் படி இந்திய தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு எல்லா அதிகாரங்களையும் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஜேட்லி, இந்த அதிகாரம் அதே அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை, பேச்சுரிமையை ஆக்கிரமித்ததாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பரப்புரையின் போது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் 5க்கும் மேற்பட்ட முறையீடுகளை செய்தது. இவற்றில் தேர்தல் ஆணையம் பிரதமருக்கு நற்சான்றிதழ் வழங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.
இந்தப் பின்னணியில் தான் ஜேட்லி தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
மேலும் அவர், “நேர்மையான பிரதமரை அவர்கள் திருடர் என்று அழைக்கலாம். ஆனால் அதேநேரம் அவர்களை பிரதமர் எந்த வகையிலும் விமர்சிக்கக்கூடாது. இது எந்த வகை நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் மறுப்பதாக தெரிவித்து காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மோடி, அமித்ஷா மீதான புகார்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்திருக்கிறது
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் தான் அருண் ஜேட்லி நேற்று தனது பிளாக்கில் நடத்தை விதிகளையும் பேச்சுரிமையையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
**
மேலும் படிக்க
**
[அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!](https://minnambalam.com/k/2019/05/08/5)

.
[தேனிக்கு திடீர் இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா?](https://minnambalam.com/k/2019/05/08/30)

.
[அஜித் பாடல்களுக்குத் தடை!](https://minnambalam.com/k/2019/05/06/65)

.
[டிஜிட்டல் திண்ணை: தினகரனிடம் ஏமாந்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/07/81)

.
[நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!]( https://minnambalam.com/k/2019/05/07/16)

.
