தூங்கினால் ரூ.42,000 பரிசு!

Published On:

| By Balaji

இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 42,000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துவருகிறது. இதனால், பெரும்பாலானவர்கள் இரவு நேரத்தை அதில் செலவிடுகின்றனர். இதனால் விளையும் தூக்கமின்மையால் அடுத்த நாள் காலையில் இவர்களால் அலுவலகத்தில் சரியாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில், ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த நிறுவனம் திருமணங்களை நடத்தி வைக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்களில் இரவில் 6 மணி நேரம் முழுமையாகத் தூங்க வேண்டும் என்று தெரிவித்தது. “இதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி ஊழியர்கள் தூங்கும் நேரத்தை கணக்கிடும். முழுமையாகத் தூங்குபவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் உணவகத்தில் ஆண்டுக்கு 42,000 ரூபாய்க்கு சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம்: என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவன அதிகாரி கூறுகையில், “20 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களில் 92 சதவிகிதம் பேர் இரவில் சரியாகத் தூங்குவதில்லை. இதனால், அலுவலக வேலைகள் பாதிக்கப்படுகின்றன. தூக்கத்தின் தேவையை ஊழியர்களிடம் உணர்த்தவே போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். ஊழியர்கள் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவும், உடற்பயிற்சிகள் செய்யவும் ஆலோசனை வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்று, இரவில் முழுமையாகத் தூங்கும் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share