தமிழ் ஆங்கிலத்தில் சட்டம் பயில்வது சிறப்பு: நாராயணசாமி

Published On:

| By Balaji

‘தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சட்டம் பயில வேண்டும்’ எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி ஆண்டு விழா நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்புரையாற்ற, முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி கூறியதாவது:

“காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. நகரில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இக்கல்லூரி இங்கு அனைத்து வசதிகளுடன் மாற்றப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் இந்தக் கல்லூரிக்கு வளர்ச்சி எதையும் கொண்டுவரவில்லை. தற்போது காங்கிரஸ் ஆட்சி இக்கல்லூரியில் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த பெரும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில், இக்கல்லூரியைப் பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.

சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் படிப்பதா? ஆங்கிலத்தில் படிப்பதா? என்ற மனக்குழப்பத்தில் இருப்பது வழக்கம். ஆனால், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சட்டத்தைப் படிப்பதே சிறந்தது. நீதிமன்றங்களில் வாதாடச் செல்லும்போது தங்களிடம் வருபவர்கள் அனைவரிடமும் உங்கள் வழக்கில் வெற்றி உறுதி என்று வாக்குறுதி அளிக்கக்கூடாது. எந்தெந்த வழக்குகளில் வெற்றி பெறுவோம், எந்தெந்த வழக்குகளில் வெற்றி பெற முடியாது என்பதைத் தெளிவாக அறிந்து முன்னதாகவே கூறிவிட வேண்டும். வீணாக ஆசை வார்த்தை கூறி யாரையும் ஏமாற்றக்கூடாது” என்று கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share