தமிழகத்தைத் தாக்கிய சினிமா புயல்: பப்ளிக் பல்ஸ்!

Published On:

| By Balaji

‘தமிழ் சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என்ற குரல் டிஜிட்டல் தளம் முதல் ரியல் தளம் வரை எங்கெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 2.0 திரைப்படத்தின் சில ஃபோட்டோக்கள் ரிலீஸானபோது அசையாத இயக்குனர் ஷங்கர் கூட ‘இதெல்லாம் அநியாயம்’ என்று ட்விட்டரில் அசைந்துகொடுத்திருக்கிறார். பன்முகக் கலைஞன் டி.ராஜேந்தர் ஃபிலிம் சேம்பர் எதிரே செவ்வாய்க்கிழமை(04.07.2017) ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்.(மத்திய மாநில அரசாங்கத்தை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏன் ஃபிலிம் சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் கேட்டால் பதில் வருமா?)

இப்படி இரட்டை வரிவிதிப்பு முறையினால் தமிழ் சினிமாவையே அசைத்துப்பார்த்திருக்கிறது இந்திய அரசாங்கம். எதற்கும் அஞ்சாத தியேட்டர் ஓனர்கள் மிக நீண்ட காலத்துக்குப்பிறகு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிவிதிப்பினால்(28+30=58%) பொதுமக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்ற பரப்புரையுடன் களமிறங்கியிருக்கும் தியேட்டர் ஓனர்கள், இந்தப் போராட்டத்துடன் தங்களது நெடுநாள் கோரிக்கையான ‘திரையரங்க கட்டணத்தை உயர்த்தும்’ கோரிக்கையையும் சேர்த்திருக்கிறார்கள். இதற்கு மக்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறதெனப் பார்க்க களம் புகுந்தோம்.

சிறு தியேட்டர்கள் மட்டும்தான் மூடப்பட்டிருக்கிறதென நினைத்து மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்குப் படையெடுத்த மக்களும் ஏமாற்றமடைந்து மால்களில் என்ன செய்வதெனத் தெரியாமல் காற்று வாங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் வேலூரிலிருந்து வந்து, டிக்கெட் கவுண்டருக்கு முன்பு நின்றிருந்த முருகன் என்பவரிடம் பேச்சுக்கொடுத்தோம். என்ன சார் பிரச்னை? என்றதும் மளமளவெனப் பேசத் தொடங்கினார். **வேலூர்ல இருந்து வேலை விஷயமா வந்தேன் சார். வரும்போதே, Transformers 5 படம் பாக்கணும்னு பிளான் போட்டிருந்தேன். ஆனா, இங்க தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. சரி, வழக்கமா தியேட்டர் மூடினாலும் 9 மணில இருந்து ரெண்டு ஷோவாவது போடுவாங்க. அதுக்காவது டிக்கெட் கிடைக்குமான்னு பாத்தா அதுவும் நடக்காதுன்னு சொல்லிட்டாங்க. எங்க ஊர் தியேட்டர்ல இந்த மாதிரி டால்பி அட்மோஸ் எல்லாம் இல்லை. சரி, வேலையோட சேர்த்து இதையும் முடிச்சிடலாம்னு பாத்தா, இப்படி ஆகிடுச்சு. அடுத்த சண்டே தான் வரணும்போல** என்று வருத்தப்பட்டுக்கொண்டார். ஏதோ டிவி சேனலில் பேட்டி எடுப்பதாக நினைத்து ஒரு குடும்பம் பக்கத்தில் வந்தார்கள். என்ன டிவி சார்? என்று கேட்டதும், மின்னம்பலம் இணையதளம் என்றுசொல்லிவிட்டு நீங்களும் படம் பார்க்க வந்தீங்களா? என்று கேட்டோம்.

**நாங்க படம் பாக்க இங்க எல்லாம் ஏன் சார் வர்றோம். பைக் பார்க்கிங் ஒரு மணி நேரத்துக்கு 30ல இருந்து 40 ரூவா ஆகுது. ரெண்டு மணிநேரம் பைக்கை பார்க்கிங்க்ல போட்டுட்டு, இங்க வந்து பசங்களுக்கு கடையெல்லாம் சுத்திக்காட்டிட்டு, ரெண்டு தரம் எஸ்கலேட்டர்ல கூட்டிட்டு போய்ட்டு, கொஞ்சம் கேம்ஸ் விளையாடிட்டு ஏதாவது சாப்பிட கலரா வாங்கிக்கொடுத்தோம்னா இதுக்கே 1000 ரூவா காலி ஆகிடும். படம் பாக்கணும்னா நேர்ல வந்தா 5 மணி நேரம் காத்திருக்கணும். ஆன்லைன் டிக்கெட் எடுத்தா 30 ரூவா எக்ஸ்ட்ரா. அப்பறம் முக்கியமா அந்த பாப்கார்ன். எங்க சார் போறது? பாப்கார்ன் விலையை சொல்லிட்டு எங்கம்மா பக்கத்துல உக்காந்தா, அவங்க காலத்துல 50 பைசா கடலையோட சினிமா பாக்கப் போன கதையை எந்த செலவுமில்லாம சொல்லிடுவாங்க. ஒரே தலைமுறைல மாற சொன்னா எப்படி சார் மாறுவாங்க?** என்று மிடில்கிளாஸ் மனநிலையை புட்டுபுட்டு வைத்தார்.

எது எப்படி இருந்தாலும் சரி, தியேட்டர் ஓனர்களின் இந்தப்போராட்டம் அவர்களது துறையைத்தாண்டி பல தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share