தனக்குத்தானே முதல்வர் பட்டம் : சசிகலா ட்விட்டர் சர்ச்சை!

Published On:

| By Balaji

சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் ஆற்றப்படுகின்றன. இந்நிலையில், அதே சமூக வலைதளத்தில் சசிகலா தன் ட்விட்டர் பக்கத்தில் தன்னைத்தானே முதலமைச்சர் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது. விஷயம் இதுதான். சசிகலாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தன்னைத் தேர்வுசெய்த தமிழக அமைச்சர்களுக்கு நன்றி என சசிகலா பதிவிட்டுள்ளார். இந்தப் பக்கத்தில், சசிகலாவின் படத்துக்குக் கீழ், தமிழக முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த பக்கம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள பஞ்சாப் அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சாத்வி கோஷ்லா, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வராக அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மூலம் பதவியேற்பதற்கு முன்னரே ட்விட்டரில் பதவியேற்பு நடந்துள்ளது. தமிழகத்தின் இப்போதைய நிலையைக் கண்டு சொர்க்கத்தில் அம்மா அழுவார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவின் ட்விட்டர் பக்கம் குறித்து காரசார விவாதங்களும் நையாண்டிகளும் சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share