ADVERTISEMENT

தண்டனை நிறுத்திவைப்பு: வைகோவுக்கு நீதிமன்றம் அறிவுரை!

Published On:

| By Balaji

தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஒராண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 18) உத்தரவிட்டுள்ளது.

வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில், ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஒரு மாதத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தண்டனையை எதிர்த்து ஜூலை 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “எனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி தீர்ப்பினை வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனவே சிறப்பு நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவதாஸ், வைகோவுக்கு அளிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், “அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தரப்பு சாட்சியங்கள் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது தவறான முன்னுதாரணமாகும்” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நீதிபதி எழுப்பிய கேள்விக்கு காவல் துறை தரப்பிலிருந்து பதிலளித்த அரசு வழக்கறிஞர், “காவல் துறை சாட்சியங்களை தவிர்த்து இரண்டு பிறழ் சாட்சியங்களும் உள்ளனர். அவர்களுடைய சாட்சியங்களின் அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது”என்று குறிப்பிட்டார். மேலும், “வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்பது சரியானதுதான். அவருக்கு குறைந்தபட்ச தண்டனைதான் வழங்கப்பட்டது. எனவே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் வரை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கூடாது” என வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்திய ஒருமைப்பாட்டை பாதிக்காத வகையில் ஒருமுறைக்கு இருமுறை வைகோவை யோசித்துப் பேசச் சொல்லுங்கள் என்று வைகோ தரப்புக்கு அறிவுறுத்தினார். இந்த வழக்கு தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் வைகோவுக்கு தண்டனை வழங்கி ஜூலை 5ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையும் நிறுத்திவைத்தார்.

ADVERTISEMENT

இதன்மூலம் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share