மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 8ஆம் தேதி வரை அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக 9ஆம் தேதி காலை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,672 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
**ராஜ்**
.