ஜாமீன் சர்ச்சை: மாஜிஸ்திரேட் கோபிநாத் விளக்கமளிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று, சென்னை சேத்துப்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வழக்கறிஞர் சுனந்தா மீது, அந்த வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுனந்தா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் தனியார் கல்லூரி மாணவர்கள் மதன், கரண் ஆகியோரைப் பிடித்தனர் பாண்டிபஜார் போலீசார். அக்டோபர் 18ஆம் தேதியன்று கைதான இருவரும், உடனடியாக சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கடுத்த மூன்று நாட்களில், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. (நேற்று இது குறித்து வெளியான செய்தியில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் என்று இடம்பெற்றமைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்)

ADVERTISEMENT

சுனந்தா பலியானது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மதன், கரண் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பிணை செலுத்த அணுகியது மாணவர்கள் தரப்பு. இந்த நிலையில், சுனந்தாவின் கணவர் சுரேந்தர் தொடர்ந்த வழக்கில் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தடை உத்தரவு குறித்து தகவல் தெரிவித்து எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குக் காத்திருக்காமல் இருவரையும் எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பாக, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத்துக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் சுரேந்தர். நேற்று (டிசம்பர் 27) இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், சைதாப்பேட்டை கிளைச் சிறைக்கண்காணிப்பாளர் இருவரும் டிசம்பர் 28ஆம் தேதி ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, எழும்பூர் மாஜிஸ்திரேட் கோபிநாத்தும், சைதாப்பேட்டை கிளைச் சிறைக் கண்காணிப்பாளரும் இன்று (டிசம்பர் 28) நேரில் ஆஜராகினர். இந்த வழக்கை நீதிபதியின் அறையில் விசாரணை செய்தது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு. நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கு முகாந்திரம் இருப்பதால், எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் 4 வார காலத்தில் மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இந்த வழக்கில் இருந்து சைதாப்பேட்டை கிளைச் சிறைக் கண்காணிப்பாளரை விடுவித்தனர்; இந்த வழக்கை 4 வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share