கடந்த மூன்று மாதங்களில் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.2,554 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் அவர்களுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2014ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி ’பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.
இத்திட்டம் துவங்கப்பட்ட அன்றே 1.5 கோடி வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. எனினும், அதைத் தொடர்ந்து இத்திட்டம் சரியாகச் செயல்படவில்லை. தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பல செயல்படாமலேயே இருந்தன. இந்நிலையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது இந்த ஜன் தன் வங்கிக் கணக்குகளில் அதிகம் பேர் டெபாசிட் செய்யத் தொடங்கினர். அதைத் தொடர்ந்த மாதங்களிலும் ஜன் தன் கணக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
கடந்த ஜூலை – செப்டம்பர் மாதங்களில் மட்டும் ஜன் தன் கணக்குகளில் ரூ.2,554 கோடி வரையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜன் தன் கணக்குகளில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.67,330 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் (மே – ஜூலை) ரூ.400 கோடி மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை – செப்டம்பர் மாதங்களில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.2,554 கோடியில், ஜூலை மாதத்தில் ரூ.1,108 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.722 கோடியும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் ரூ.724 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
�,