-ஆரா
கஜா புயலுக்குப் பிறகான இந்த ஒரு வாரமும் டெல்டா மக்களுக்கு இருட்டிலேயே கழிந்துகொண்டிருக்கிறது. விடிந்தால் சூரிய வெளிச்சம், அந்தி சாய்ந்தால் பாம்பு, பூரான், நண்டுவாக்கிளி போன்ற விஷ பூச்சிப் பொட்டுகளுடன் கூடிய இருட்டு இரவு என்பதே அவர்களின் அசாதாரணமாகியிருக்கிறது.
**முற்றிலும் சிதைந்த மின்சாரக் கட்டமைப்பு**
சுமார் ஒரு கோடி எண்ணிக்கையிலான மரங்கள் சாய்ந்திருக்கின்றன என்றால், சுமார் 8 லட்சம் தந்தி மரங்கள் என்று அழைக்கப்படும் மின் கம்பங்களும் சாய்ந்திருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இது மிகக் கடுமையான சவால்.
கஜா தாக்கிய மொத்த 8 மாவட்டங்களிலும் மின் கம்பங்கள் மட்டுமல்ல, மின் கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லக் கூடிய ‘சர்வீஸ்’ எனப்படும் மின் இணைப்புகளும் அறுந்துள்ளன. நகரங்களில் ஏதோ சிற்சில இடங்களுக்கு மின் இணைப்பு கொடுத்திட முழுமுயற்சி எடுத்து வருகிறார்கள் மின்சார வாரிய அதிகாரிகள். ஆனால் கிராமங்களைப் பொறுத்தவரை வரும் பொங்கல் பண்டிகைக்காவது மின்சாரம் கிடைக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். அதனால்தான் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி அறுந்து தொங்கும் மின்சாரக் கம்பிகளில் ஈர ஆடைகளை உலர்த்தி வருகிறார்கள் டெல்டா மக்கள்.
”மின்சாரத்தின் தடமே இல்லாத பாலைவனத்துக்கு கூட குறிப்பிட்ட சில நாட்கள்ல மின் இணைப்பு கொடுத்துவிட முடியும். ஆனா இங்க டெல்டாவுல நிலைமையே வேற. ஏற்கனவே இருக்கிற எல்லா மின் இணைப்புகளும் அறுந்து கிடக்கு. வெறும் மின் கம்பங்கள் மட்டுமே பிரச்சினை இல்ல. ஒவ்வொரு மின் கம்பத்தையும் இணைக்கிற ஒயர்கள், அவற்றை வீடுகளோடு இணைக்கும் ஒயர்கள், பற்பல டிரான்ஸ்ஃபார்மர்கள் என ஒட்டுமொத்த டெல்டா மின்சார உள்கட்டமைப்பே சிதைந்து போயிருக்கு. இந்த இடிபாடுகளை, சிக்கல்களை முதல்ல அப்புறப்படுத்தவே கொஞ்ச நாள் ஆகும், அதுக்குப் பிறகுதான் புது மின் கம்பங்கள் நட்டு புது இணைப்புகள் கொடுத்து அதுக்கும் அப்புறம்தான் மின்சாரம் கொடுக்கணும்” என்று கவலை தெரிவிக்கிறார் திருவாரூர் மாவட்டத்தில் தீவிரமாக பணியில் இருக்கும் விழுப்புரம் மின் கோட்ட ஊழியர் ஒருவர். அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் இடையிலும் இந்தப் பேச்சு இருக்கிறது.
**புயலிலே ஒரு விளக்கு**
புயல் நவம்பர் 15 இரவு 12 மணிக்குத் தொடங்கியது. அதற்கு முன்னதாக சுமார் நான்கு, ஐந்து மணி நேரம் முன்னதாகவே மின்சாரத்தை நிறுத்திவிட்டது மின் வாரியம். அதன் பின்னர் இன்று நவம்பர் 22 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திலும் மின்சார இணைப்புக்கான சாத்தியமே இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன டெல்டா கிராமங்கள். மின் இணைப்பு இல்லாததால் ஒட்டுமொத்த இயக்கமே நின்று போனதைப் போல ஆகிவிட்டன. மாலை ஆறுமணிக்கெல்லாம் கும்மிருட்டு சூழ்ந்துவிடுகிறது. இதனால் மீட்புப் பணிகள், நிவாரண உதவிப் பணிகள் வெகுவாக தடைபடுகின்றன. செல்போன்களுக்கு சார்ஜ் இல்லாததால் தகவல் தொடர்பிலும் பெரும் தேக்கம் டெல்டாவின் உள் கிராமங்களில் நிலவுகிறது.
இயற்கை நமக்கு எவ்வளவோ வாய்ப்புகளை வாரி வழங்கியிருந்தும் அதை நாம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) பயன்படுத்திக் கொள்ளாததால்தான் இந்த தத்தளிப்பு. இந்த இருட்டுக்கு இடையேதான் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திருக்கண்ணங்குடி என்ற கிராமம் ஒரு நம்பிக்கைக் கீற்றை நமக்குள் விதைக்கிறது.
ஆம்… புயல் அடித்துக் கொண்டிருந்தபோது திருக்கண்ணங்குடி கிராமத்தில் மூன்று இடங்களில் தெருவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. அன்று மட்டுமல்ல நேற்று இரவு வரை அந்த தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஊரே இருட்டுக்குள் இருக்கையில் இந்தத் தெருவிளக்குகள் எரிவதற்குக் காரணம் அவை சூரிய மின் சக்தியில் இயங்குகின்றன.
“திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயிலின் பக்தர் ஒருவர் சென்னையில் இருக்கார். அவர்தான் கோயில் வாசல், சன்னிதித் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட இடங்கள்ல சோலார் லைட்டை நிறுவிக் கொடுத்தார். ஒவ்வொரு லைட் கம்பமும் நல்லா அஸ்திவாரம் கான்கிரீட் போட்டுருக்கிறதால புயல்ல சாயவே இல்லை. இதுமட்டுமில்ல ஊரே இருட்டுல இருக்குற நேரத்துல இந்த சோலார் லைட்தான் வெளிச்சம் கொடுக்குது. இதுபோல எல்லா இடத்துலயும் அமைச்சுருந்தா புயல் பாதிச்ச பகுதிகள்ல மீட்புப் பணிய சீக்கிரமா செய்திருக்கலாம்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய திருக்கண்ணங்குடி கிராம வாசிகள்.
நினைத்துப் பாருங்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் சூரிய மின் சக்திக் கம்பங்களை பரவலாக அமைத்திருந்தால் விழுந்தது போக எஞ்சியவையாவது இந்நேரம் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கும். சூரிய மின் சக்தி கம்பங்கள் பொருத்திவிட்டால் ஒவ்வொரு கம்பத்துக்கும் இடையே கேபிள் தேவையில்லை, பற்பல மின் உபகரணங்கள் தேவையில்லை. டிரான்ஸ்பார்மர் தேவையில்லை. சூரியனிடம் இருந்து மின்சாரத்தை கிரகிக்கும் அந்த போர்டு, அப்புறம் பேட்டரி, உறுதியான மின் கம்பம் இதுமட்டுமே தேவை. ஊருக்கு ஒரு பத்து விளக்காவது சூரிய மின் சக்தியில் அமைத்திருந்தால் இந்நேரம் அது மக்களுக்கும் உதவியாக இருக்கும். அரசுக்கும் உதவியாக இருக்கும்.
**என்னாச்சு முதலமைச்சரின் சூரிய மேற்கூரை திட்டம்?**
உலக வெப்பமயமாதலை குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், தமிழக அரசு, சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான், முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம். இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TDA) பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
முதலமைச்சர் சூரிய மேற்கூரை ஊக்கத் தொகைத் திட்டத்தின்படி தனி நபர்கள் ஒரு கிலோவாட்டுக்கான சூரிய மேற்கூரையை அமைப்பதற்கு, தமிழக அரசு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற தனிநபர்கள், தங்கள் வீட்டின் மேற்கூரையில், குறைந்த பட்சம் 100 சதுர அடி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.
மேலும், வீட்டு உபயோகிப்பாளர்கள், நிகர அளவு திட்டத்தின் கீழ் பயன்பாட்டிற்கு பின் மின்கட்டமைப்பில் செலுத்தும் மின்சாரத்திற்குரிய மின் வரவைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர வீட்டு உபயோகிப்பாளர்கள் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிர்ணயித்த விலையில் அதிகபட்சமாக 30 விழுக்காடு மைய அரசின் நிதியுதவியைப் பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தின் (teda.in) மூலம் ஆன்லைனில் பெறப்பட்டு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முதல் என்ற அடிப்படையில் (first come first serve basis) அனுமதி அளிக்கப்படும் என்றெல்லாம் அறிவிப்புகள் இணையத்தில் இருக்கின்றன.
ஆனால் இந்த திட்டத்தை அரசு எவ்வளவு தூரம் மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறது? சூரிய மின் சக்தித் திட்டம் பற்றிய விழிப்புணர்வும் ஊக்கமும் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருந்தால் இன்று டெல்டா ஒருவாரமாக இருட்டியில் மூழ்கியிருக்காதே?
8 லட்சம் மின் கம்பங்கள் புதிதாக நிறுவி, அவற்றுக்கான மின் தடத் தகவமைப்புகள் நிறுவி மின்சாரத்தை மீளவும் கொண்டுவருவதற்கான செலவைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் சூரிய மின் சக்தி அமைப்பதற்கான செலவு பெரியதாக ஆகிவிடாது.
”பகல் முழுதும் வெயிலில் காயுறோம். ராத்திரியில இருட்ல தவிக்கிறோம்” என்று புழுங்குகிறார்கள் டெல்டா மக்கள். பகல் முழுதும் காயும் வெயிலை வைத்தே இரவை சமாளிக்கலாம் என்ற மின் அறிவை பயன்படுத்தாததுதான் இதற்குக் காரணம்.
இனியாகிலும் தமிழ்நாடு மின்சார வாரியமும், தன்னார்வ நிறுவனங்களும் சூரிய மின் சக்தி பற்றிய விழிப்புணர்வை டெல்டாவில் மட்டுமல்ல தமிழகம் முழுதும் ஏற்படுத்த வேண்டும்.
கஜா உரக்கக் கத்தியிருக்கிறது. காது இருப்பவர்கள் கேட்கக் கடவது!
[புயலுக்குப் பின்னும் புயல்! கஜா கவரேஜ்1](https://minnambalam.com/k/2018/11/20/106)
[இயற்கை அன்னையும் ஹைபிரிட் தென்னைகளும் கஜா கவரேஜ்-2](https://minnambalam.com/k/2018/11/21/32)
�,”