சுக்லாவுக்குப் போதிய அனுபவம் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

Published On:

| By Balaji

சிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

1983 ஐபிஎஸ் அதிகாரியான இவர், முன்னாள் மத்தியப் பிரதேச டிஜிபி ஆவார். ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ரிஷிகுமார் சுக்லா பதவியில் இருந்து நீக்கப்பட்டு போலீஸ் ஹவுஸிங் கார்ப்பரேஷனில் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ம.பி குவாலியரைச் சேர்ந்த இவர், கொல்கத்தாவில் தனது தொடக்கக் கல்வியை முடித்துள்ளார். ஐஐடியின் முன்னாள் மாணவரான சுக்லா பட்டப்படிப்பை முடித்த பிறகு ஐபிஎஸ் தேர்வுக்கு ஆயத்தமாகி அதில் வெற்றி கண்டார். தனது 23 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ராய்ப்பூரில் தலைமைக் கண்காணிப்பாளராகவும், டாமோ, ஷிவ்புரி மற்றும் மன்சுர் ஆகிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2009-2012 வரையிலான காலகட்டங்களில் ஏடிஜிபியாக இருந்துள்ளார்.

பின்னர், 2017ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மருத்துவ விடுப்பில் சென்ற அவர் மீண்டும் கடந்த ஆண்டு பணிக்குத் திரும்பினார். இதற்கிடையே, ம.பி.யில் புதிய முதல்வராகக் கமல்நாத் பதவியேற்றார். இதையடுத்து சுக்லா போலீஸ் ஹவுஸிங் கார்ப்பரேஷனில் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் உளவுத் துறையிலும் பணியாற்றியுள்ளார். இவரது தந்தையான ஆர்.எஸ்.சர்மாவும் 1990 ஆண்டு காலகட்டத்தில் டிஜிபியாக இருந்துள்ளார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஏர் இந்தியா ஊழல், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் பூபீந்தர் சிங் ஹூடா மீதான வழக்குகள், உத்தரப் பிரதேச மணல் சுரங்க ஊழல், சாரதா நிதி நிறுவன வழக்கு, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சார் மீதான எஃப்ஐஆர் ஆகிய வழக்குகளை ஆய்வு செய்ய இவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, சுக்லா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, “சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்வதில் விசாரணை அனுபவம் மற்றும் ஊழல் வழக்கு விசாரணை அனுபவம் இரண்டையும் பார்க்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சுக்லா விவகாரத்தில் அனுபவத்தை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு ஊழல் வழக்கு விசாரணை யில் போதிய அனுபவம் இல்லை. இதன் மூலம் டெல்லி சிறப்புக் காவல் படை சட்ட விதிமுறை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவை நீர்த்து போகச் செய்யப்பட்டுள்ளது’’ என சுக்லாவின் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

“தேர்வு பட்டியலில் தான் தேர்வு செய்த அதிகாரிகள் சிலரை சேர்க்கும் வகையில் சில விதிமுறைகளை மாற்ற கார்கே முயற்சி செய்தார்” என்று குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், சிபிஐ இயக்குநர் நியமனத்தில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது. தேர்வுக் குழுவில் நடந்தது குறித்து தனது சொந்த கருத்துகளை கார்கே தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share