அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது. 100 பக்க குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பளித்தார்.
ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டனை விபரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதை ஒட்டி ஞானசேகரன் நீதிமன்றத்துக்கு காலையில் அழைத்துவரப்பட்டார்.
இந்த நிலையில் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.
பிஎன்எஸ் 329(விருப்பத்துக்கு மாறாகவும், அத்துமீறியும் நடத்தல்)ன் படி, மூன்று மாத சிறை தண்டனை,
126(2) (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்)ன் படி, ஒரு மாத சிறை தண்டனை,
87 (வலுக்கட்டாயமாக கடத்தி, தன் விருப்பத்துக்கு இணங்க வைத்தல்)ன் படி, 10,000 ரூபாய் அபராதத்துடன் பத்தாண்டுகள் சிறை தண்டனை. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாத சிறை தண்டனை.
127(2) (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்) ன் படி, ஒரு வருட சிறை தண்டனை.
75(2) (பாலியல் துன்புறுத்தல்)ன் படி, மூன்றாண்டுகள் கடும் சிறை தண்டனை.
76 (பாலியல் வன்கொடுமை செய்தல்)ன் படி, பத்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறை தண்டனை,
64(1) (பாலியல் வன்கொடுமை செய்தல்) ன் படி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 30 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை.
351(3)(கொலை மிரட்டல் விடுத்தல்) ன் படி, 10,000 ரூபாய் அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறை தண்டனை.
238(b)(பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்)ன் படி, 10,000 ரூபாய் அபராதத்துடன் மூன்றாண்டுகள் சிறை தண்டனை.
தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டம் 66ன் படி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மூன்றாண்டுகள் சிறை தண்டனை.
அதன்படி மொத்தமாக 30 ஆண்டுகளுக்கும் குறையாத சிறை தண்டனை ஞானசேகரனக்கு விதிக்கப்பட்டுள்ளது.
