^காஷ்மீர் டிஐஜியின் கண்ணீர் கடிதம்!

Published On:

| By Balaji

காஷ்மீர் டிஐஜி தீவிரவாத தாக்குதலில் பலியான உதவி ஆய்வாளரின் மகளுக்கு உருக்கமான கடிதம் எழுதி அனைவரின் மனதை நெகிழ வைத்திருக்கிறார். அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அந்தப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை போலீஸ் படை தீவிரவாதிகள் வேட்டையில் இறங்கியது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தக் கடும் தாக்குதலில் இருதரப்பிலிருந்தும் பலியாகினர். இந்தக் கடும் சண்டையில் காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். அப்துல் ரஷீத் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. கம்பீரமாக பணிக்குப் புறப்பட்டுச் சென்ற தந்தை சடலமாகத் திரும்பி வந்ததைக் கண்டு துயரத்தில் துடித்தழுதார் அப்துல் ரஷீதின் மகள் ஜோரா. அவரது கண்ணீரும் கதறலும் காண்போரை கலக்கடித்துள்ளன. தந்தையின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுத ஜோராவின் பிஞ்சு மனதைத் தேற்ற டிஜிபி ஒருவர் ஜோராவிற்காக ஒரு ஆறுதல் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் டிஜிபியின் முகநூல் பக்கத்தில் நேற்று 30.8.2017 பதிவிடப்பட்டுள்ளது.

அந்த உருக்கமான கடிதம் இதோ:

என் அன்புக்குரிய ஜோரா….

உனது தந்தையின் உயிர்த் தியாகம் காலத்துக்கு நிலைத்திருக்கும். இது ஏன் நடந்தது என்று புரிந்து கொள்ள நீ மிகவும் சிறிய வயது குழந்தை. உன் தந்தையின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மனித குலத்தின் எதிரிகள். உன் தந்தையும் நாங்களும் வீரம் மற்றும் தியாகத்தின் சின்னங்கள். சமூகத்தைப் பாதுகாக்க எங்களை போன்ற காவலர்கள் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டும், மீள முடியாத அதிர்ச்சியிலும் உள்ளனர். இவையெல்லாம் உண்மையில் எங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நல்லதொரு சரித்திரத்தை உருவாக்கும். நம்முடன் பணியாற்றியவர்கள், நமக்குக் கதாநாயகனாக தெரிந்தவர்களை நம்மால் மறக்க இயலாது. இந்த மோசமான நிலையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை நினைவில் வைத்துக் கொள். உன்னுடைய ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்கள் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. இதயத்தை நொறுக்குகிறது.

இந்தச் சமூகத்தை காக்க சேவையாற்றுவது என்ற எங்கள் நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் வலிமையை வழங்க வேண்டும். இந்த காவலர் சீருடையை நாங்கள் அணிந்த போது நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி மிகவும் உன்னதமானது.

நினைவலைகள் எங்கள் ஆன்மாவும் அர்ப்பணிப்பும் மாற்றத்தின் தூண்டுகோலாக இருக்கட்டும். இது அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான கருத்தாக அமையட்டும். உண்மையான காவலராக நாட்டுக்குத் தியாகம் செய்த உன் தந்தையின் நினைவுகள் எங்களுடன் எப்போதும் இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஏராளமான வாழ்த்துகளுடன்,

இப்படிக்கு

ஜம்மு காஷ்மீர் காவல் துறை�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share