காவிரிப் பயணம்: கால்கள் பழுதுபட்ட ஜவாஹிருல்லா

Published On:

| By Balaji

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கால் மூட்டு பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குக் கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்டாவிலிருந்து நடைபயணம் புறப்பட்டார். அவரோடு ஜவாஹிருல்லா, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நடந்தனர்.

ADVERTISEMENT

”காவிரி நடைபயணத்தின்போதே பேராசிரியருக்கு மூட்டு வலி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அதுபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நடந்தார். அப்போது ஏற்பட்ட வலி பயணம் முடிந்தும் தொடர்ந்தது. அதையடுத்து மருத்துவர்களிடம் சோதனை செய்தபோது இரு கால் மூட்டும் தேய்மானம் அடைந்துவிட்டது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்த பின் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

நேற்று (ஜூலை 11) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் குணம் அடைந்து வர இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்றார் நம்மிடம் பேசிய மமக மாநில இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி.

ADVERTISEMENT

காவிரிக்காக நடந்தவரின் கால்கள் பழுதுபட்டிருப்பதைப் பற்றித் தகவல் அறிந்ததும் அரசியல் தலைவர்கள் ஜவாஹிருல்லாவின் நலம் விசாரித்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share