தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக சென்னை அடையாறு கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் மட்டும் பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவருடைய தாயார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்கின்ற விதத்தில் பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த மாணவி மர்மமான முறையில் இறந்ததாக தாய் சந்தேகப்படும் போது, அதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், அப்படி சம்பவம் ஏற்பட்டிருந்தால் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்க வேண்டும்.
3 நாட்களாக தங்களுடைய மகளை இழந்த பெற்றோர்கள் நீதிகேட்டு போராடி வருகிறார்கள். பெற்றோருக்கு நீதி கிடைக்காத காரணத்தினால் தான் அசாதாரண சூழல் ஏற்பட்டது, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே வன்முறைக்குக் காரணம் என கூறினார்.
உளவுத்துறை முறையாக துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு முழுமையான காரணம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் மற்றும் அவர் கையில் இருக்கிற காவல்துறையுமே காரணம்” என கூறினார்.
சீனிவாசன்