பிஷப் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறிய கன்னியாஸ்திரியை, ஆசை வார்த்தை காட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்ற பாதிரியாரை, ராஜினாமா செய்யும்படி தேவாலய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க தேவாலயத்துக்குச் சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி அனுபமா, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது , கோட்டயம் மாவட்ட எஸ்.பி.யிடம்பாலியல் வன்புணர்வு புகார் கூறினார்.
2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னைப் பாலியல் வல்லுறவு செய்தார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு வரை 13 முறை அந்தக் கொடூரச் செயல் நடந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தபட்ட பிஷப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை சாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகளை கோட்டயம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் கன்னியாஸ்திரி கொடுத்த புகார் குறித்த ஆதாரங்களையும் திரட்டிவந்தனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அனுபமாவின் தோழியிடம் (இவரும் கான்யாஸ்திரி) பிஷப்பின் ஆதரவாளரான பாதிரியார் ஜேம்ஸ் என்பவர் பேசியதன் ஆடியோ பதிவு நேற்று (ஜூலை 29) மலையாள ஊடகங்களில் வெளியானது.
11 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில் பேசும் பாதிரியார், வழக்கை வாபஸ் பெற்றால் கன்னியாஸ்திரியின் குடும்பத்திற்கு 10 ஏக்கர் நிலமும் புதிய கான்வென்ட் கட்டிடமும் கட்டித் தரப்படும் என ஆசை வார்த்தை கூறுகிறார். வழக்கை வாபஸ்பெறாவிட்டால் அனுபமா பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் பாதிரியார் எச்சரிக்கிறார்.
ஆனால் கன்னியாஸ்திரி, பாதிரியாரின் மிரட்டலுக்கு பயப்படபோவதில்லை எனக் கூறியதோடு, ‘எங்களுக்கு நீதி வேண்டும். எங்கள் மரியாதையையும் மாண்பையும் நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை’ வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்.
விடாமல் அந்த நபர், ‘உங்களின் நிலை எனக்குப் புரிகிறது. இது என்னுடைய சிபாரிசு தான். அதைப் பற்றி யோசியுங்கள்’ என்கிறார்.
இந்த ஆடியோ பதிவின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி பாலியல் புகாரை விசாரிக்கும் தனிப்படை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது பற்றி கூறும்போது; “இந்த விவகாரம் வழக்குக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்படும்” என்றனர்.
இந்நிலையில், தேவாலய அமைப்பான சிஎம்ஐ, ‘பாதிரியார் ஜேம்ஸைப் பதவியிலிருந்து விலகச் சொல்லியிருக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு விஷயம். பாதிரியார் சொன்ன கருத்துகளுக்கும் தேவாலய அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாதிரியாரின் நீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
�,