ஏன் மிதிவண்டியில் வந்தாய்?
ஜென் துறவி ஒருவர் தன் சீடர்கள் ஐவர் மிதிவண்டியில் செல்வதைக் கண்டார். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு மடத்துக்குள் வந்ததும் ஒவ்வொருவரையும் அழைத்துக் கேட்டார்.
“ஏன் மிதிவண்டியில் வந்தாய்?”
இதுதான் அவர் ஒவ்வொருவரிடமும் கேட்ட கேள்வி.
முதலாவது சீடன்: “உருளைக்கிழங்கு மூட்டையை ஏற்றி வந்தேன். நானா சுமக்கப் போகிறேன்? வண்டிதானே சுமக்கப் போகின்றது? அதனால்தான் மிதிவண்டியில் வந்தேன்.”
குரு: “ஆஹா! அருமை. நீ முதியவனாகும்போது என்னைப் போல் தடுமாற மாட்டாய்.”
இரண்டாவது சீடன்: “நான் மிதிவண்டியில் வேகமாகப் போகும்போது என்னைக் கடந்து செல்லும் மரங்களையும் பாதையையும் ரசிப்பேன். அதனால்தான் மிதிவண்டியில் வந்தேன்.
குரு: “மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறதே. நீ கண்களை அகலமாய்த் திறந்து உலகைக் கவனிக்கிறாய்.”
மூன்றாம் சீடன்: “நான் மிதிவண்டியில் வரும்போதெல்லாம் மந்திர உச்சாடனம் செய்ய முடிகிறது. அதனால் மிதிவண்டியில் வந்தேன்.”
குரு: “ஆஹா! உன் மனமும் மிதிவண்டியின் சக்கர அச்சுடன் சேர்ந்து லயத்துடன் செயல்படுகிறது. கொடுத்து வைத்தவன் நீ.”
நான்காம் சீடன்: “நான் மிதிவண்டியில் வரும்போது ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் காண்கின்றேன். கால்கள் மிதிக்கின்றன, கண்கள் பார்க்கின்றன, கைகள் வண்டி கவிழாமல் செல்ல உதவுகின்றன. வண்டியின் ஒவ்வொரு செயல்பாடும், எனது உடலின் ஒவ்வொரு செயல்பாடும் ஒருங்கிணைந்து இருக்கின்றன. அதனால் மிதிவண்டியில் வந்தேன்.”
குரு: “சரியாகச் சொன்னாய்! நீ ஹிம்சையற்ற அஹிம்சைப் பாதை என்னும் தங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றாய்.”
ஐந்தாம் சீடன்: “நான் மிதிவண்டியில் வந்ததற்காக மிதிவண்டியில் வந்தேன்.”
குரு: “நான் உன் சீடனாகத்தான் தகுதி பெற்றவன். நீ என் குருவாக இருக்கத் தகுதி பெற்றவன்.”,”
