ஐபிஎல் தொடர் முதன்முதலாக கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது, அதில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக தோனியே இருக்கிறார்.
அவரது சீனியர்கள், சக வீரர்கள், ஜூனியர்கள், அடுத்த தலைமுறை வீரர்கள் என பிற ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளனர்.
ஆனால் 17-வது ஆண்டிலும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்து சென்னை இதுவரை அறிவிக்கவில்லை.
இதனால் ரசிகர்களே அவ்வப்போது இவர் தான் அடுத்த கேப்டன் என, பல்வேறு வீரர்களையும் கேப்டன் லிஸ்டில் வைத்து அலசி ஆராய்வது வாடிக்கையான விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார்? என்னும் கேள்விக்கு தற்போது சி.ஈ.ஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், ” தோனியின் உடற்தகுதி தற்போது நன்றாக உள்ளது.
அவர் வருகின்ற ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வலைப்பயிற்சியில் ஈடுபடுவார். அவரின் ஓய்வு குறித்த திட்டங்கள் என்னவென்பதை இதுவரை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
சென்னை அணியின் அடுத்த கேப்டன் யாரென்பதை கூடிய விரைவில் தோனியே, உங்களிடம் நேரடியாக பகிர்ந்து கொள்வார்,” என தெரிவித்து உள்ளார்.
அநேகமாக 2024 ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி, சென்னை அணியின் புதிய கேப்டன் யாரென்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்வியை அனைவரும் ‘சின்ன ரெய்னா’ என அழைக்கின்றனர்.
ஆனால் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ” சமீரை அடுத்த ருத்துராஜ் கெய்க்வாடாகத் தான் நாங்கள் பார்க்கிறோம்,” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கும் சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்த அறிவிப்பிற்கும் எதுவும் கனெக்ஷன் உள்ளதா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
IPL 2024: நான் வந்துட்டேன்னு சொல்லு… மும்பை கேப்டனாக நீடிக்கும் ஹர்திக் பாண்டியா?