உதயசந்திரன் பணிமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

உதயசந்திரன் பணிமாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்டச் செயலாளராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை செயலாளராகப் பணியாற்றிய த.உதயசந்திரன், அத்துறையின் பாடத்திட்டச் செயலாளராக மட்டும் பணியாற்றுமாறு மாற்றப்பட்டார். தற்போது அவரை தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்து இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் மீண்டும் உதயசந்திரனை பாடத்திட்டச் செயலாளராக மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

அதில், “நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளுக்குத் தமிழக மாணவர்களைத் தயார் செய்யும் அளவுக்குப் பாடத்திட்டக்குழு பணியாற்றி வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப் பணியின் காரணமாக 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் உள்பட மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்கள் இனிமேல்தான் தயாரிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக தமிழக பள்ளி பாடநூல்கள் தற்காலப்படுத்தப்படாத நிலையில் இதுவொரு நல்ல முயற்சியாக நடந்து வந்தது. இந்த நிலையில் உதயசந்திரன் மாற்றப்பட்டிருப்பது இம்முயற்சியைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும்.

பாடநூல் தயாரிப்பு பணி முடியும் வரை த.உதயசந்திரனை அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அவர் பணி மாற்றம் செய்யப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே, அவரது பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்டச் செயலாளராகத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share