கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 11 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டாவது தவணை இந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி . 1.06 கோடி லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
அதோடு மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியானவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 26) ஆய்வு செய்தார்.
அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “ இன்று தொலைபேசியில் பேசிய பெண்களிடம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளைப் பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களைக் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றைச் சார் ஆட்சியர் – துணை ஆட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்” என்று பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது 30 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே பெற்ற 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 35 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீதமுள்ள 3 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்படும்.
மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பம் செய்வது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார்” என்றார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வராகவனின் முதல் தெலுங்கு படம் “RT4GM”
திராவிட மாடலுக்குள் திருவண்ணாமலை மாடல்? என்ன செய்தார் எ.வ.வேலு?