^இறுதியாக அரையிறுதியில் இந்திய அணி!

Published On:

| By Balaji

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய (ஜூலை 15) லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையோடு இரு அணிகளும் களமிறங்கின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிர்த்தி மன்தானா மற்றும் பூனம் ரவுத் குறைந்த ரன்களில் வெளியேறினர். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் விளையாடி 109 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோரினை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 60 ரன்களும், வேதா கிருஷ்ணமூர்த்தி 70 ரன்களும் சேர்த்தனர். எனவே இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சு வீராங்கனை காஸ்பெரெக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் களமிறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை சுஷி பேட்ஸ் ஒரு ரன் எடுத்த நிலையில் ஷிகா பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ரசெல் பிரிஸ்ட் ஐந்து ரன்களில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி ஏழு ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த சட்டர்வைட் 26 ரன்னிலும், கேதே மார்ட்டின் 12 ரன்னி்லும் அவுட் ஆனார்கள். அந்த அணி வீராங்கனைகள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப நியூசிலாந்து அணி 79 ரன்களில் ஆல்அவுட் ஆனது .

25.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்களையும் நியூசிலாந்து அணி பறிகொடுத்ததால், இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கயாக்வார்ட் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சதம் அடித்த கேப்டன் மிதாலி ராஜ் ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share