பெண் ஒருவருக்கு கறை படிந்த இருக்கையை வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள சாணக்கியபுரி பகுதியில் வசிக்கும் பிங்கி என்ற பெண் தனக்கும், தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்தில் ரூ.48,739 க்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி அஜர்பைஜானின் பகு நகரில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். பயணத்தின் போது தனக்கு சுகாதாரமற்ற, கறை படிந்த இருக்கைகள் வழங்கப்பட்டதாக பிங்கி புகார் செய்தார். ஆனால் அவரது புகார் முறையாக விசாரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அவர் டெல்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாயம் கமிஷனில் புகார் அளித்தார்.
இதற்கிடையே இண்டிகோ விமான நிறுவனம், பிங்கி புகார் அளித்த நிலையில் அவருக்கு மாற்று இருக்கை ஒதுக்கியதாகவும், அதில் அவர் பயணம் செய்தார் என்றும் கூறி இருந்தது.
இதனை விசாரித்த கமிஷன் தலைவர் பூனம் சவுத்ரி, உறுப்பினர்கள் பாரிக் அஹமது மற்றும் சேகர் சந்திரா ஆகியோர் கொண்ட அமர்வு, ”எதிர் தரப்பினர் (இண்டிகோ) சேவையில் குறைபாடு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அவருக்கு ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் வலி, மன வேதனையைப் பொறுத்தவரை, உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதன்படி, எதிர் தரப்பினருக்கு மன வேதனை, உடல் வலி மற்றும் துன்புறுத்தலுக்கு இழப்பீடாக ரூ.1.5 லட்சம் வழங்குமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம்” என தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்குச் செலவுக்காக ரூ.25,000 வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
