ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ

Published On:

| By Balaji

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டுமென மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மத்திய, மாநில உறவுகள் குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் கடந்த வாரம் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை அறிமுகம் செய்து இருந்தார். இதுபோலவே மேலும் பல எம்.பி.க்களும் தீர்மானத்தை அறிமுகம் செய்திருந்தனர். குலுக்கல் சீட்டு மூலம் எந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது முடிவுசெய்யப்பட்டது. அப்படி நடைபெற்ற குலுக்கலில் வைகோ அவர்கள் பெயர் முதலில் தேர்வு பெற்றது.

ADVERTISEMENT

இதனையடுத்து நேற்று (நவம்பர் 29) மாநிலங்களவையில் தீர்மானத்தை தாக்கல் செய்த வைகோ, சுமார் 30 நிமிடங்கள் வரை அதுகுறித்து உரையாற்றினார்.

“பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக்காக எழுப்பிய குரல். டாக்டர் கலைஞர் 1974 இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், அவர் அமைத்த ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரை,தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி மாநாடு தீர்மானம், கொல்கத்தாவில் சிபிஎம் ஜோதிபாசு அவர்கள் இடதுசாரிகள் நிறைவேற்றிய தீர்மானம்” உள்ளிட்டவற்றை விளக்கமாக எடுத்துக்கூறிய வைகோ, “இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும். ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் விவாதத்தில் மீது உரையாற்றினர். இதுதொடர்பான விவாதம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் நடைபெறவுள்ளது. அதற்கு பின்னர் இதுதொடர்பாக வைகோ நிறைவுரையாற்றவுள்ளார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share