பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆண் குழந்தைக்கு முதலில் ஜெயலலிதா பெயரைச் சூட்டியிருக்கிறார். பின்னர் ஆண் குழந்தை என்று தெரியவந்ததும் ராமச்சந்திரன் என்று எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டியுள்ளார்.
திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஏப்ரல் 3) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தற்போது 100 நாட்கள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலி, நாளை மறுதினம் அதாவது இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு 100 நாட்கள் வேலைத் திட்டம் 365 நாட்களுக்கு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் அதன் வேலை நாட்களை அதிகரித்து அறிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகவும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 200 நாட்களாக உயர்த்தி அறிவித்திருந்தனர். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும்கூட 100 நாட்கள் வேலைத்திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அனைவரையும், மிஞ்சும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தை 365 நாட்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் செங்கோட்டையன்.
இந்த பிரச்சாரத்தின் போது சுவாரஸ்யமான ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த தம்பதியினர் தங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொல்லியிருக்கின்றனர்.
முதலில் வேனிலிருந்தபடியே குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள், அது ஆண் குழந்தை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து கீழே இறங்கி வந்த அமைச்சர் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று எம்.ஜி.ஆர் பெயரை வைத்திருக்கிறார்.�,