ADVERTISEMENT

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு!

Published On:

| By Balaji

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது:

ADVERTISEMENT

2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்ட நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share