நாட்டில் அனைவரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு வழியில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது சாத்தியமா? அதிகபட்ச மக்கள் பயன்பெறுவதை வளர்ச்சி உறுதி செய்ய வேண்டும் என்றால், போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினால்தான் அது சாத்தியமாகும். ஆனால், பெரும்பான்மை உழைப்பாளி மக்களுக்கு இந்நாட்டில் அரசு, வேலையளிப்பவர் வழங்கும் சமூகப் பாதுகாப்பு (Social Security) இல்லை எனும்போது, வேலை கிடைத்தால் மட்டும் வளர்ச்சியின் பயனை ஒருவர் பெற்றுவிட்டதாக நாம் சொல்லிவிட முடியாது.
80 விழுக்காட்டுக்கும் மேலான உழைப்பாளி மக்கள் முறைசாராத் துறையில்தான் (Informal sector) உள்ளனர். நிரந்தர வேலையை உறுதிசெய்யும் ஒப்பந்தம், மாதம் தவறாமல் ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பயன்கள் ஆகிய மூன்றும் இருந்தால் ஒருவர் முறைசார்ந்த தொழிலாளர் ஆவார். இந்த அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் இந்தியாவில் முறைசார்ந்த தொழிலாளர்கள் வெறும் 17 விழுக்காடு மட்டும்தான்.
இந்தியாவில் வேலையின்மை என்பதை எடுத்துக்கொண்டால், பொதுவாகவே அது 5 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் இருந்து வந்துள்ளது. இதன் பொருள், உழைக்கும் வயது மக்களில் 95 விழுக்காட்டினர் தரமான, நாகரிகமான, நிரந்தரமான வேலையில் இருக்கின்றனர் என்பதல்ல. விரும்பும் வேலை கிடைக்கவில்லை என்றால் அது கிடைக்கும்வரை வீட்டிலேயே இருந்துவிட முடியாது என்பதால், ஏதேனும் ஒரு வேலையை அவ்வப்போது செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தியாவில் உழைக்கும் வயதில் இருக்கும் ஒருவர் ஓராண்டில் 30 நாட்களுக்கு மட்டுமே ஊதியம் ஈட்டித்தரும் வேலையில் ஈடுபட்டாலும் அவர் வேலைபெற்றவராகவே கருதப்படுவார்.
ஆக, வேலைவாய்ப்புகளின் தன்மையைப் பற்றிப் பேசாமல், பொருளாதார வளர்ச்சியால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது மட்டுமல்ல, அது அறமற்றதும் கூட. இந்நிலையில், வளர்ச்சியானது ஓரளவிற்காவது அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்றால், அது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரித்தால் மட்டும் போதாது, அதைப் பன்மடங்கு பெருக்கினால் மட்டுமே அது சாத்தியம். வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளதா என்று அளவிடுவதற்கு இதை ஏன் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்?
2015-இல் தேசிய அளவில் ரூ. 10,000 அல்லது அதற்கும் குறைவான மாத வருமானத்தில் வாழ்ந்த குடும்பங்கள் 67 விழுக்காடு. ரூ. 50,000 அல்லது அதற்கும் குறைவான மாத வருமானம் பெற்ற குடும்பங்கள் 98 விழுக்காடு என்கிறது அசிம் பிரேம்ஜி நிறுவனம் தயாரித்துள்ள State of Working India Report 2018. இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு இன்றைய காலத்தில் ஒரு குடும்பம் அடிப்படை வசதிகள் பெற்று, குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தோடு நாகரிகமான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமா எனும் கேள்வியை நமக்கு நாமே கேட்டு, நேர்மையாகப் பதில் அளித்தால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது ஏட்டளவில் மட்டுமே இருப்பதை நாம் உணர முடியும்.
[அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 1](https://minnambalam.com/k/2019/05/17/17)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://minnambalam.com/k/2019/05/18/24)
**
.
.
�,”