ஜனவரி - மார்ச் காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிடவுள்ள இந்திய நெட்வொர்க் நிறுவனங்கள் இக்காலாண்டில் 40 சதவிகிதம் வரையிலான வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையே நீடித்து வரும் போட்டியால் வருவாய் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்துறையில் புதிதாக நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, அழைப்பு இணைப்புச் சலுகைகளின் பயன்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியதால் இப்போட்டி இன்னும் வலுத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 40 சதவிகிதம் வரையிலான வருவாய் இழப்பைச் சந்திக்கும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நெட்வொர்க் நிறுவனம் தனது 2ஜி சேவையை நிறுத்தியதும் வருவாய் இழப்புக்குக் காரணமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய கோடாக் செக்யூரிட்டீஸ் ஆய்வறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண முறையால் இதர நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இந்தக் காலாண்டிலும் வருவாய் இழப்பு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஜியோவின் கட்டணக் குறைப்பு நடவடிக்கையால் இணைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனங்களான வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.